என் மகன்களை மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரேமலதா நெகிழ்ச்சி

விஜே கம்பெனிஸ் மற்றும் தாஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள படம் படைத் தலைவன். யு.அன்பு இயக்கி உள்ள இந்தப் படத்தில் விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்துள்ளார். யாமினி நாயகியாக நடித்துள்ளார். வரும் மே 23ம் தேதி வெளிவருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நடந்தது, இதில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், கஸ்தூரி ராஜா, சசிகுமார், ஏ.ஆர். முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் அன்பு, ஒளிப்பதிவாளர் சுரேஷ், தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஜேஎஸ்கே. சதீஷ், நடிகை யாமினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன்.

கள்ளழகர் படத்தில் நடித்த போது, கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா? என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன். அதேபோன்று தான் சண்முக பாண்டியனும், தற்போது அவருடன் நடித்த மணியன் யானையை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம்.

கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை. இப்படம் மக்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

Leave A Reply

Your email address will not be published.