புராண கேரக்டர்களுடன் சமூக கேரக்டர்களை இணைத்து உருவாகும் படங்கள் சுவாரஸ்மானவை, எமனுக்கு எமன், அதிசய பிறவி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் அப்படியானவை அந்த வரிசையில் தற்போது வந்துள்ள படம் இது.
இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது.இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள். இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான்.
அங்கு எமதர்மராஜா கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும், அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறான். பூலோகம் வந்த அன்பு, நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான்.
இதற்கிடையில் அவளது தாய்மாமனும் இவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் அன்பு மீது காதல் கொள்கிறான். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான். இவ்வேளையில் 59 நாட்கள் முடிந்து 60 வது நாளும் பிறக்கிறது. எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா? என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது படம்.
மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமிதான் படத்தின் நாயகன், தன்னால் திருமணம் நின்றுபோன குற்ற உணர்ச்சி, அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க தவிப்பு, இடையில் அவருக்கு வரும் காதல் என எல்லா உணர்வுகளையும் கச்சிதமாக வெளிபடுத்தி இருக்கிறார். நாயகி சந்திரிகாவிற்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் கிடைத்த கேப்பில் நிறைவாக செய்திருக்கிறார்.
அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி,டி பி கஜேந்திரன்,நெல்லை சிவா பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, கராத்தே ராஜா ஆகியோர் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும், என்.சசிகுமாரின் இசையும் நிறைவாக இருக்கிறது.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர். எஸ்.ஏ. கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். எஸ்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். ஜாலியான படம் தந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.