தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் குறைவு. இப்படியான சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் சினிமாவின் மீதிருக்கும் காதலால், ஒரு காதல் படத்தை இயக்கி தந்திருக்கிறார் ஜெயலட்சுமி. அவருக்கு வரவேற்பும் வாழ்த்தும்.
கடலில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வரும் நாயகன் லிங்கேஷ் பகுதிநேர பணியாக சுற்றுலா கைடாகவும் இருக்கிறார். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வரும் ஆங்கிலேயே பெண் லியா, லிங்கேசின் நல்ல குணம், அவர் குடும்ப உறவுகள், அவர் செய்யும் சேவை இவற்றால் கவரப்பட்டு காதலிக்கிறார். ஆனால் லிங்கேசை பால்ய பருவத்தில் இருந்தே கணவனாக பாவித்து காதலித்து வருகிறார் அத்தை மகள் திவ்யா. இந்த முக்கோண காதலில் லிங்கேஷ் யாருடன் இணைகிறார், யார் விட்டுக் கொடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
முக்கோண காதல் கதை சினிமாவிற்கு புதிதில்லை என்றாலும், வெளிநாட்டு காதல், பால்ய பருவ காதல் என்கிற புதிய விஷயங்களை இணைத்து நேர்த்தியாகவும், அடர்த்தியாகவும் கதை சொல்லியிருக்கிறார் ஜெயலட்சுமி.
லிங்கேஷ் இரண்டு காதல்களுக்கு இடையில் கிடந்து தவிப்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனம் மாமன் மகனை நினைத்து உருகும் கிராமத்து பெண் கேரக்டரில் கவனிக்க வைக்கிறார். மாமனுக்காக எதையும் செய்யும் பெண்ணாக மிரள வைக்கிறார். இருவரையும் தூக்கி சாப்பிடுகிறார் லண்டன் நடிகை லியா. காதலுக்காக ஏங்குவதும், அதை கிடைக்காமல் போகுமோ என்று தவிப்பதும், பின்பு சூழ்நிலை உணர்ந்து முடிவெடுப்பதுமாக முதிர்ச்சியான நடிப்பை தந்திருக்கிறார்.
கஞ்சா கருப்பு, மாறன் குரூப்பின் காமெடி ரசிக்க வைக்கிறது. மதுசூதனராவ், காட்பாடி ராஜன், தர்சன் ஆகியோர் நிறைவாக செய்திருக்கிறார்கள்.டோனிசென் மற்றும் வெங்கடேசின் ஒளிப்பதிவு காதலையும், கடலையும் அழகாக காட்டுகிறது. சாண்டி சாண்டல்லோவின் இசை காதலை தாலாட்டுகிறது.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் தரமான காதல் படம் என்பதில் எந்த குறையுமில்லை.