இன்றைய இளம் தலைமுறையினருக்கு சொகுசான ஆடம்பர வாழ்க்கையே இலக்கு. அதற்கு தேவை பணம். அதுவே பிரதானம். இதற்காக அவர்கள் இழப்பது குடும்பம், உறவு என்கிற பெரும் சொத்துக்களை. இதனை மையமாக வைத்து இதற்கு முன்பே பல படங்கள்ன வந்திருந்தாலும். இன்றைய நவீன கலாச்சாரத்தின் பின்புலத்தில் அற்புதமான படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சிவா ஆறுமுகம்.
தயாரிப்பாளரின் மகனை ஹீரோவாக்கி ஆட்டம், பாட்டம் என உப்புமா படங்களை தந்துகொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் துணிச்சலாக கதையை மட்டுமே நம்பி நல்ல படத்தை தந்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
கதை ரொம்ப சிம்பிள். கைநிறைய சம்பளத்துடனும், அன்பான குழந்தையுடன் வாழ்கிறார்கள் காதல் தம்பதிகளான விஜித்தும், கண்மணியும். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினரால் தனித்து விடப்படுகிறார்கள். இதனால் குழந்தையை கவனித்துக் கொள்ள அழைத்து வரப்படுகிறார் தேவயானி.
இலங்கை போரில் தன் மகளை இழந்த தேவயானி இவர்களின் குழந்தை நிலாவை தன் மகள்போல் பேணி பாதுகாத்து வளர்க்கிறார். தங்கள் பல வருட திட்டப்படி விஜித், கண்மணி இருவரும் அமெரிக்காவில் செட்டிலாக கிளம்புகிறாள். குழந்தை மீது உயிரையே வைத்திருக்கும் தேவயானி குழந்தையை பிரிய முடியாமல் தயாரிக்கிறார். இந்த நிலையில் குழந்தை கடத்தப்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
நேர்த்தியான, நெகிழ்வான குடும்ப கதையாக இருந்தாலும் அதற்குள்ளும், சின்னதாக ஒரு த்ரில்லர், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் துயரம். கூட்டுக் குடும்பதின் பெருமை, தனிக்குடித்தனத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேசுகிறது படம்.
தேவயானிக்கு பல வருட இடைவெளிக்கு பிறகு அருமையான கேரக்டர். ஜோதிம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். கணவன், மனைவியாக நடித்திருக்கும் விஜித்தும், கண்மணியும் இன்றைய தம்பதிகளை கண் முன் நிறுத்துகிறார்கள். குழந்தை நட்சத்திரங்கள் அஹானாசினியும், நிகாரிகாவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ராஜ்கபூர், நீலிமா இசை ஆகியோரும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு நிழற்குடைக்கு வர்ணம் பூசி இருக்கிறது, நரேன் பாலகுமாரின் இசை படத்திற்கு இசைந்திருக்கிறது.
ரத்தம் தெறிக்கும் வன்முறை படங்களுக்கு மத்தியில், உறவின் பெருமை பேசும் குடும்ப படம் மட்டுமல்ல இளம் தலைமுறை உயர்த்தி பிடிக்க வேண்டிய நிழற்குடை.