இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சசிக்குமார், அவரது மனைவி சிம்ரன், இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். சென்னையில் வாழும் சிம்ரனின் அண்ணன் யோகி பாபு உதவியுடன் இங்கு குடியேறி புதிய வாழ்க்கையை தொடர்கிறார்கள்.
வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கும்போது ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சசிகுமார் குடும்பத்தைத் தேடுகிறது போலீஸ். குண்டு வெடிப்புக்கும் சசிகுமார் குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறதா ? சசிகுமார் குடும்பம் என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக நெகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாக சொல்கிறது அபிஷன் ஜீவிந்த்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.
மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கிறார் சசிகுமார். அன்பு, அனைவருக்கும் உதவும் குணம், அப்பாவித்தனம் இவற்றுடன் வலியைச் சுமக்கும் கண்கள், மகனிடம் உடையும் தருணம், குடும்பத்திற்காகப் பதறும் நிமிடங்கள் என எல்லா திசையிலும் சிக்சர் அடிக்கிறார் சசிகுமார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்போடு, ஆடல், பாடலிலும் கலக்குகிறார் சிம்ரன்.
மூத்த மகனாக மிதுன் ஜெய் சங்கர், அழுத்தமான நடிப்பையும் வழங்கி கவனிக்க வைக்கிறார். சிறுவன் கமலேஷின் அட்டகாசமான நடிப்பு, பல காட்சிகளில் குலுங்கி சிரிக்க வைக்கிறது. அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார் யோகிபாபு. எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஶ்ரீஜா ரவி, இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், அபிஷன் ஜீவிந்த், யோக லட்சுமி ஆகியோர் தங்களது இயல்பான நடிப்பால் படத்திற்கு பலமாகி இருக்கிறார்கள். வில்லத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாக ராம்குமார் பிரசன்னா கவனிக்க வைக்கிறார்.
ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் அரவிந்த் விஸ்வநாதன். ஷான் ரோல்டன் இசையில், பாடல்கள் மனதிற்கு இனிமை தருவதோடு, கதையோட்டத்திற்கும் கைகொடுத்திருக்கின்றன.
போர்களாலும், பொருளாதார வீழ்ச்சிகளாலும் உலகம் முழுக்க அகதிகள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அரசுகள் மனிதநேயத்தோடு பார்க்க வேண்டும் என்ற பாடம் நடத்துகிறது படம்.