அநாதையான சூர்யாவை பிரபல தாதா ஜோஜு ஜார்ஜ் எடுத்து வளர்க்கிறார். தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை செய்யும் சூர்யா தன் காதலி பூஜா ஹெக்டேவை திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார். ஆனால் ஒரு கடத்தல் விவகாரத்தில் தந்தைக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வதால் சூரியாவிற்கும், ஜோஜுக்கும் மோதல் வெடிக்கிறது. திருமணம் நிற்கிறது, காதலியும் கோபித்துக் கொண்டு வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்ஷனுக்கான களம் என்றாலும் கூட, கதையை காதல் கோணத்தில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதனால் ஆக்ஷன் காட்சிகளக்கு நிகராக காதல் காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. குறிப்பாக ‘கனிமா’ பாடலுடன் சேர்த்து வரும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியில் ஒட்டுமொத்த படக்குழுவும் உழைப்பை கொட்டியிருக்கிறது.
படம் முழுக்க சூர்யாவின் ராஜ்ஜியம்தான். காதல் காட்சிகளில் பூஜாவிடம் உருகுவது, ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களிடம் ஆக்ரோஷம் காட்டுவது என வெரைட்டி காட்டி ஈர்க்கிறார். இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.
பூஜா ஹெக்டேவுக்கு முக்கியமான கதாபாத்திரம். ‘டஸ்கி’ மேக்கப்பில் பக்குவமான நடிப்பை தந்து அப்ளாஸ் பெறுகிறார். ஜோஜு ஜார்ஜுக்கு நடிக்க பெரிய வேலை இல்லை என்றாலும் வில்லன் கேரக்டரில் நிறைவை தந்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படம் முழுக்க பின்னணி இசையில் பிரமாண்டம் காட்டுகிறார். கனிமா பாடல் வரும் இடத்தில் சீட்டில் யாரும் அமரவில்லை. அது தவிர மற்ற பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.
இரண்டாம் பாதியில் அந்தமானில் இருக்கும் ஒரு சிறிய தீவுக்கு ஹீரோ செல்லும்போது கதை வேறொரு பரிமாணத்துக்கு செல்கிறது. பிரிட்டிஷ் காலத்து அடிமை முறை, மிராசுதாரர் குடும்பம், ரப்பர் தொழிலாளர்கள், கல்ட், தீர்க்கதரிசனம் என பல புதிய விஷயங்களை பேசுகிறது படம்.
இது சூர்யா – கார்த்திக் சுப்பராஜின் ஒரு சிறப்பான ‘தரமான சம்பவம்’ ரெட்ரோ.