‘வின்னர்’, ‘லண்டன்’, ‘கிரி’ படங்களில் சுந்தர்.சி – வடிவேலு காமெடி மேஜிக் காலத்தை கடந்தும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் அதே மேஜிக் இந்த படத்தில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் சுந்தர்.சி. ’மாமன்னன்’ படத்தில் தனது சீரியசான கதாபாத்திரம் பெற்றுத் தந்த நல்ல வரவேற்புக்குப் பிறகு ஒரு முழுமையான காமெடி ரோலில் மீண்டும் வடிவேலு களமிறங்கியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’.
அரசன்கோட்டை என்னும் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி திடீரென காணாமல் போகிறார். அதே பள்ளியில் ஆசிரியயையாக பணிபுரியும் கேதரீன் தெரசா மாணவி குறித்தும், அப்பள்ளியின் தாளாளர்கள் (மைம் கோபி, அருள்தாஸ்) செய்யும் சட்டவிரோத தொழில்கள் குறித்தும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் செய்கிறார். இதனையடுத்து அந்தப் பள்ளிக்கு ஆசிரியராக ஒரு போலீஸ் அண்டர்கவர் ஆபரேஷனுக்கு அனுப்பப்படுகிறார். அதே பள்ளிக்கு புதிய பி.டி.மாஸ்டராக வருகிறார் சரவணன் சுந்தர்.சி. அங்கு வேலை செய்யும் மற்றொரு பி.டி.மாஸ்டர் வடிவேலு.
சுந்தர் சி, கேத்ரின், வடிவேலு, கணக்கு வாத்தியார் பகவதி பெருமாள் ஆகியோர் சேர்ந்து எப்படி காணாமல் போன மாணவியை கண்டுபிடிக்கிறார்கள். வில்லன்கள் பதுக்கி வைத்திருக்கும் 100 கோடி ரூபாயை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
கதாபாத்திரங்களின் அறிமுகம், வில்லன்களின் பின்னணி, அவர்களுக்கும் ஹீரோ ‘கேங்’-க்குமான மோதல் என விமான வேகத்தில் செல்கிறது முதல் பாதி படம். இரண்டாம் பாதியில் படம் ‘மணி ஹெய்ஸ்ட்’ பாணிக்கு மாறியபிறகு ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.
வில்லனின் வீட்டில் வடிவேலு – சுந்தர்.சி நுழையும் இடம், ‘சார்லஸ்’ என்ற கேரக்டரில் மாறுவேடத்தில் வடிவேலு வில்லன் வீட்டுக்கு செல்லும் இடம், பெண் வேடத்தில் வடிவேலு செய்யும் அலப்பறை என பல அதிரிபுதிரி காமெடியால் கலக்குகிறது படம்.
ஆக்ஷன் ஹீரோவாக சுந்தர் சி, விஜய், அஜித்திற்கே டஃப் கொடுகிறார். காமெடியனாக வடிவேலுவின் கம்பேக் என்று இப்படத்தை தாராளமாக சொல்லலாம். வழக்கமாக சுந்தர்.சி படங்களில் ஹீரோயின்கள் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படும் வழக்கத்தை அவரே இதில் உடைத்து கேதரீன் தெரசாவுக்கு படத்தில் ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தை கொடுத்திருப்பது சிறப்பு. முனீஷ்காந்த், பகவதி பெருமாள், சந்தான பாரதி, அருள்தாஸ், மைம் கோபி, காளையன் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு கொள்ளைக் காட்சிகளில் படத்துக்கு உயிரூட்டி இருக்கிறது. சத்யா.சி-யின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். லாஜிக் பற்றி கவலைப்படாமல் பார்த்தால் செம ஜாலியான காமெடி எண்டர்டய்னர்.