ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ தயாரிப்பாளர்கள்:

லவ்வர், குட் நைட் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோ தற்போது தயாரித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதனை அபிஷன் ஜீவிதன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகபதி பெருமாள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் அறிமுக நேற்று நடந்தது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், ” குட்நைட் – லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எங்களின் மூன்றாவது படம். இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறோம். இந்த படமும் ஹிட் ஆகும் என நம்புகிறேன்.
சசிகுமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்- நடிகர் என பிரபலமாக இருக்கும் அவர் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து, அவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவோம் என நம்புகிறேன்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பொருத்தவரை இது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் அபி என்னை சந்தித்து கதையை சொல்லும்போது அவருக்கு 23 வயது தான். கதையை இடைவேளை வரை கேட்கும்போது அதிர்ச்சியாகி விட்டேன். முழு கதையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.‌ அந்தக் கதையை கேட்டதும் இயக்குநர் அபியை எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்திருந்தது.‌ அந்தக் கதையில் அவர் சொன்ன விசயங்கள் ஜீவன் உள்ளதாக இருந்தது. அவர் கதையை எப்படி சொன்னாரோ… அதை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், ” குட்நைட் – லவ்வர் ஆகிய இரண்டு படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவால் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யை உருவாக்க முடிந்தது. இதற்காக முதலில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் அபிஷன் கதையை சொல்லத் தொடங்கியதும் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு ‘மொமென்ட்ஸ்’ வரும். அதைக் கேட்டவுடன் இந்த படத்தை நிச்சயம் தயாரிக்கலாம் என்றேன். அந்தத் தருணத்தில் இந்த படம் எப்படி வரும் என்று நான் நினைத்திருந்தேனோ.. அதேபோல் இயக்குநர் அபிஷன் உருவாக்கி இருந்தார். இந்த வயதில் இவ்வளவு பெரிய கடின முயற்சியை நான் கண்டதில்லை. அவர் எதிர்காலத்தில் மிக சிறப்பான இயக்குநராக வருவார்.‌ இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும்.‌ திரை உலகில் அவருக்கு பேராதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

சசிகுமார் இல்லை என்றால் நாங்கள் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டோம். 16 வயதுடைய மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் இவரைத் தவிர வேறு யாரும் எங்களின் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையை புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிப்பதற்கு ஒரு துணிச்சல் தேவை. அதை மேற்கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்த சசிகுமாருக்கு நன்றி.
மோகன் ராஜனின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில கலைஞர்கள் இல்லை என்றால் படம் உருவாக்க வேண்டாம் என நினைப்பேன் . அத்தகைய கலைஞர்கள் தான் மோகன் ராஜன் – ஷான் ரோல்டன் – பரத் விக்ரமன். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். சில படங்களுக்கு இசையை தவிர்த்து விட்டு ரசிக்க முடியாது. எந்த கதையை நான் கேட்டாலும் முதலில் இதில் ஷான் ரோல்டனின் இசை எப்படி இருக்கும் … என்ன மாயஜாலம் செய்யும் … என்று தான் யோசிப்பேன். அப்படி யோசித்துக் கொண்டுதான் கதையையே கேட்பேன்.

இதுவரை நான் கேட்ட கதைகளுக்கு நான் நினைத்ததை விட அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். இதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகேஷ் என் பார்ட்னர். பொதுவாக இரண்டு பேர் இணைந்து பணியாற்றினால் கிரியேட்டிவ் டிஃபரன்ஸ் வரும்.‌ ஆனால் மகேஷ் நான் என்ன நினைத்து செய்தாலும் அதற்கு முழு பக்க பலமாக இருப்பார். நாங்கள் இதுவரை இரண்டு படங்களை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறோம். இப்பொழுது மூன்றாவது படத்தில் இணைந்திருக்கிறோம். மகேசின் ஆதரவு இல்லை என்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் யாரையும் எந்த ஒரு தருணத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தாது என்பதை மட்டும் நான் இங்கு உறுதியாக சொல்கிறேன். இந்தத் திரைப்படம் எங்கள் குழுவினரின் நேர்மையான முயற்சி. அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அன்பை கொடுக்கும். ரசிகர்களை கவர்வதற்கான அனைத்து விசயங்களும் இப்படத்தில் உள்ளது. மே முதல் தேதி அன்று வெளியாகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.