வல்லமை: மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு

மனைவியை இழந்த கிராமத்து மனிதரான பிரேம்ஜி தனது 13 வயது மகள் திவ்யதர்ஷினியுடன் பட்டணத்திற்கு பிழைப்பு தேடி வருகிறார். வந்த இடத்தில் ஒரு சிறிய வீட்டில் தங்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டியும், ஆட்டோ ஓட்டியும் சம்பாதிக்கிறார். அதைக் கொண்டு தனது மகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார்.

ஒரு நாள் மகள் பூப்பெய்துவிட்ட அறிகுறிகள் தெரிய உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவளை யாரோ மயக்க மருந்து கொடுத்து பாலியில் பலாத்காரம் செய்திருப்பதாக கூறுகிறார். யார் இந்த கொடுமையை செய்தது என்று அறிந்து அவனை பழிவாங்க தந்தையும், மகளும் தேடத் தொடங்குகிறார்கள். அவர்கள் அந்த கயவனை கண்டுபிடித்தார்களா? தண்டித்தார்களா? யார் அவர்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது, அதில் சற்று மாறுபட்டு வெளியாகி இருக்கிற படம். இதற்கு முன்பு காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த பிரேம்ஜி முதன் முறையாக ஒரு சீரியசான கேரக்டரில், அதுவும் 13 வயது குழந்தைக்கு தந்தையாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து பரிதவிப்பதும், பழிவாங்க துடிப்பதுமான உணர்வை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கேரியரில் இது முக்கியமான படமாகி இருக்கிறது.

அவருக்கு நிகராக நடித்திருக்கிறார் திவ்யதர்ஷினி. அவர் பழிவாங்க துடிப்பது சரி, ஆனால் தனது தனக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர் அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளாததும், அதனை சரியாக வெளிப்படுத்தாததவும் குறையாக தெரிகிறது. குற்றவாளி யார் என்பது தெரியாத வரை பரபரவென பறக்கும் கதை. தெரிந்ததும் மெதுவாக நகர்கிறது.

ஆனாலும் நேர்த்தியான கதை, தெளிவான திரைக்கதை, இன்றைய காலகட்டத்திற்கு தேவையான படிப்பினை ஆகியவற்றை வைத்து தரமான படத்தை தந்து, தன்னை தரமான இயக்குனராக அடையாளம் காட்டி இருக்கிறார், கருப்பையா முருகன்.

வல்லமை, மகள்களை பெற்ற ஒவ்வொரு அப்பாவுக்குமான படம்:

Leave A Reply

Your email address will not be published.