ஒன் லைன் கதை ஒன்றை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் திக் திக் என தவிக்க விடுவதுதான் மலையான சினிமாவின் தற்போதைய டிரண்ட். அந்த பாணியில் தமிழில் முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் இளையராஜா கலிய பெருமாள்.
சபரி மலைக்கு சாமி தரிசனத்திற்கு கிளம்பும் அன்றைய தினம் இரண்டு சிக்கலான விஷயம் நேர்மையான, அதிரடியான போலீஸ் அதிகாரியான சிபிராஜூக்கு வருகிறது. தங்கள் பேத்தியை காணவில்லை என்று ஒரு வயதான தம்பதிகள் வருகிறார்கள், ஓடும் ஆம்னி பஸ்சில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டிருக்கிற தகவலும் வருகிறது. இந்த இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அது என்ன? அதை 10 மணி நேரத்திற்குள் எப்படி கண்டுபிடித்து விட்டு சிபிராஜ் சபரிமலைக்கு புறப்படுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
சமீபகாலமாக ஒரு வெற்றியை பார்க்காத சிபிராஜுக்கு இது சரியான படமாக அமைந்துள்ளது, கூர்மையான விசாரணை, அதிரடியான ஆக்ஷன் என தனது இன்னொரு பரிமாணத்தை காட்டி இருக்கிறார். காதல், டூயட் எதுவும் இல்லாமல் கதைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்திருக்கிறார். வெல்டன் சிபி.
ஓடும் பஸ்சில் ஒரு கொலை, கொலை செய்தவன் அந்த பஸ்சிலேயே பயணம் செய்கிறான். பயணிக்கும் 27 பேரில் யார் கொலையாளி, எதற்காக கொலை செய்யப்படுகிறான் என சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது படம். காணாமல் போன பெண் பற்றிய தேடலிலும் பல திடுக்கிட வைக்கும் திருப்பங்கள். இரண்டு சம்பவங்களும் சந்திக்கிற அந்த கிளைமாக்ஸ் மாஸ்.
திரில்லர் பிரியர்களுக்கு சரியான விருந்து. சிபி ராஜுக்கு சரியான கம்பேக்.