ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கி உள்ள படம் ‘திரு.மாணிக்கம்’, சமுத்திரகனி டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் நடித்துள்ளனர். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு. உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார், சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 27ம் தேதி வெளிவருகிறது.
படத்தின் அறிமுக நிகழ்வில் சமுத்திரகனி பேசியதாவது: தனித்தனியாக எல்லாம் படத்திற்காக உழைப்பதில்லை, எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். எல்லோரும் வெற்றிக்காகத் தான் உழைக்கிறோம். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான் உழைக்கிறோம். ‘அப்பா’வுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து இந்தப்படம் கிடைத்துள்ளது.
இந்தப்படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். நந்தா கதை சொன்ன போது அய்யா பாரதிராஜாவிடம் போய் சொல் அவர் ஓகே சொன்னால் ஆரம்பித்து விடலாம் என்றேன். அவர் கதை கேட்டு உடனே ஓகே சொன்னார், அப்புறம் ஒவ்வொருத்தராக வந்தார்கள்.
உண்மை தான் நேர்மை. நேர்மை என்பது தான் இயல்பு. முன்பெல்லாம் கெட்டவனிடம் சேராதே வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள். இப்போது நல்லவனைப் பார்த்து அப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கதை படித்தவுடன் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அனன்யா நான் கண்டுபிடித்த பெண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அம்மா வடிவுக்கரசி அசத்தியிருக்கிறார். அப்பா பாரதிராஜா என்னைப் பார்த்து ‘பண்பட்ட நடிகனாகிட்டே’ என்று பாராட்டினார். அவரோடு பணிபுரிந்த ஐந்து நாள் வரம். குழந்தைகள் மிக நன்றாக நடித்துள்ளனர். இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். திரு.மாணிக்கம் களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும். என்றார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசியதாவது:
இந்த திருமாணிக்கம் ஊர் கூடி இழுத்த தேர். இங்கு உள்ள எல்லோரும் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். இந்தக்கதையை முதன்முதலில் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸிடம் தான் சொன்னேன் அவர் முதன் முதலில் பாராட்டிய கதை இது தான். லிங்குசாமி முதல் எல்லோரும் கேட்டுவிட்டு இது படமாக்கப்பட வேண்டிய கதை என்று ஊக்கம் தந்தார்கள். ரவிக்குமார் சார் இந்தக்கதை கேட்டு ஆரம்பித்தார். சமுத்திரகனி அண்ணன் கதை கேட்டு உடனே ஷூட்டிங் போகலாம் என என்னை நம்பி வந்தார். அவரால் தான் இந்தப்படம் உருவாகியது.
அமீர் அண்ணன் எனக்குப் படம் காட்டுங்கள் என்றார் அவர் படம் பார்த்துப் பாராட்டியது பெருமை. பாராதிராஜா ஐயாவை நான் இயக்கியது எனக்குப் பெருமை. சொன்ன கதையைப் படம்பிடித்துத் தந்த சுகுமாருக்கு நன்றி. உயிர் கொடுத்த விஷால் சந்திரசேகருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ரவிக்குமார் சார், ராஜா செந்தில் இப்படத்தைத் தைரியமாக எடுத்ததற்கு நன்றி. ஒரு நல்ல தமிழ்ப்படத்தை எடுத்திருக்கிறார் ரவிக்குமார் சார். அவருக்குத் தமிழ் மக்கள் பத்திரமாகக் கரை சேர்க்க வேண்டும் நன்றி. என்றார்.