ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் அன்சன் பால் தமிழில் நடிக்கும் 5வது படம் ‘மழையில் நனைகிறேன்’, அவர் கதாநாயகனாக நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இதுவாகும்.
டி.சுரேஷ் குமார் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்திகிறார்கள். விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார், கல்யாண் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 12ம் தேதி வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குனர் டி.சுரேஷ்குமார் கூறியதாவது: இது ஒரு பக்காவான காதல் படம். எத்தனையோ படங்களில் விதவிதமான காதலை பார்த்து விட்டோம். இது ஒரு நிராகரிக்கப்பட்ட காதலை பற்றிய படம். நிராகரிப்புக்கான காரணம் என்ன? அது சரி செய்யப்பட்டதா என்பதே கதை. படத்தின் கிளைமாக்ஸ் பேசப்படுவதாக இருக்கும், அப்படியான ஒரு புதிய விஷயத்தை சொல்லியிருக்கிறோம்.
மழைக்கும் இந்த கதைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மழை ஒரு கதாபாத்திரமாகவே வரும். மழையில் தொடங்கும் படம் மழையிலேயே முடியும். அதனால்தான் படத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளோம்.
ரெபோ மோனிகாவுக்கு இது முக்கியமான படமாக இருக்கும், உள்ளுக்குள் காதல் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் ரஜினி சாரின் தீவிர நண்பர் என்பதால் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். விஜய்சேதுபதி எனக்கு நண்பர் படத்தில் அவர்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. சூழ்நிலைகள் சரியாக அமையாததால் அவர் நடிக்கவில்லை. என்றார்.