‘கொட்டுக்காளி’ சூரியின் இன்னொரு முகத்தை காட்டும்: இயக்குனர் வினோத் ராஜ் நம்பிக்கை

விடுதலை, கருடன் படத்திற்கு பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. மலையாள நடிகை அன்னா பென் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கி உள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளும் பெற்றது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதுகுறித்து இயக்குனர் வினோத்ராஜ் கூறியதாவது: நான் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்களை பார்த்து, சினிமாவுக்கு வந்தவன். ‘கூழாங்கல்’ படம் சர்வதேச அளவில் விருதுகளை குவித்ததால்தான் அதற்கு பெரிய அடையாளம் கிடைத்தது. அதனால் இந்த படத்தையும் சர்வதேச அளவில் எடுத்துச் சென்றேன்.

அதோடு திரையரங்கில் திரையிடப்பட்ட பிறகு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொள்வதை விட முன்பே கலந்து கொள்ளும்போதுதான் அந்த படத்தின் பார்வையும், வியாபாரா பரப்பும் விரிகிறது. அதற்காகவே இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாவுக்கு கொண்டு சென்றோம். மற்றபடி விருதுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல.

இந்த படத்தின் கதை ஒரு பயணம், அந்த பயணத்தின் வழியாக கிராம மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். படத்தில் சேவல் ஒரு கேரக்டராகவே வருகிறது. கொட்டுக்காளி என்பது கிராமத்தில் எதையும் துணிந்து செய்கிற துணிச்சலான பெண்களை குறிக்கும் சொல், இந்த படத்தின் நாயகி அப்படிப்பட்டவள் என்பதால் அந்த டைட்டிலை வைத்துள்ளோம். சூரி தற்போது கமர்ஷியல் ஹீரோவாகி விட்ட நிலையில் அவரது இன்னொரு பரிமாணத்தை காட்டுகிற படமாக இருக்கும்.

மலையாள நடிகை அன்னா பென்னின் படங்கள் எனக்கு பிடிக்கும். அவர் இந்த படத்தில் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அவரை நடிக்க வைத்துள்ளோம். அவரது தந்தை ஒரு எழுத்தளார். அவரும் கதையை கேட்டு மிகவும் பாராட்டினார். மகள் நடிக்க சம்மதித்தார். படத்திற்கு இசை அமைப்பாளர் யாருமில்லை. இயற்கையான ஒலியை அப்படியே பயன்படுத்தி உள்ளோம். படத்தில் பாடல்கள் இல்லை. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.