ராட்சசன் படத்தில் வில்லனாக மிரட்டிய சரவணன் ஹீரோவாக நடித்துள்ள படம். கிடைத்த வேலைகளை செய்து எளிய வாழ்க்கை வாழ்கிறார். பார்க்க அப்பாவியாக இருந்தாலும் திடீரென கொடூர கொலைகளை செய்து அதனை எளிதாக இன்னொருவரை மாட்டி விடுகிறார். அவர் கொலை செய்வது ஏன்? யாரை கொலை செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
மொத்த படத்தையும் தாங்கி பிடிப்பது சரவணன்தான்.இயல்பான நடிப்பிலும் கொடூர முகத்திலும் நடிப்பால் மிரட்டுகிறார். அவரது மனைவியாக தீபாலி, பைனான்ஸ் நிறுவனர் சிவா மற்றும் தாட்சாயிணி, ஹனீபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர்.
நாட்டில் நாள்தோறும் நடந்து வரும் பாலியல் குற்றங்களை கதைக்களமாகக் கொண்டு, குடும்பத்திலுள்ள சில பெண்களின் கலாசாரம் மீறிய நடவடிக்கைகளால் அக்குடும்பமும், அதைச்சார்ந்த தனி மனிதனும் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சமூக அக்கறையுடன் இயக்குனர் என்.பி.இஸ்மாயில் சொல்லியிருக்கிறார். சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவும், ஜித் இசையும், ரா.ராமமூர்த்தியின் வசனமும் படத்துக்கு பலம்.
பக்கா க்ரைம் திரில்லர் படமாக இருந்தாலும் மெதுவாக நகர்வது இதன் குறை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, படத்தை விறுவிறுப்பாக்கி இருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும் இந்த குற்றப் பின்னணி.