விமர்சனம்: கள்வன் வெல்வானா-?
‘கும்கி’ பாணியில் யானையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் கள்வன். அநாதைகளான ஜி.வி.பிரகாசும், தீனாவும் சின்ன சின்ன திருட்டுகள் செய்து ஜாலியாக வாழ்கிறார்கள். எப்படியாவது வன இலாகாவில் வேலை வாங்கி விட வேண்டும் என்பது ஜீவியின் கனவு. அதற்கு 4 லட்சம் தேவை. இதற்காக மாஸ்டர் பிளான் போட்டு முதியோர் இல்லத்தில் ஆதரவற்று இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார்கள். பாரதிராஜாவை வைத்து என்ன பிளான் போடுகிறார்கள். அது சக்சஸ் ஆனதா என்பதுதான் கதை.
தொடர் பின்னடைவுகளை சந்திக்கும் ஜி.வி.பிரகாசுக்கு ஆறுதல் அளிக்கிறான் இந்த கள்வன். பரட்டை தலை, அழுக்குபடிந்த உடை, களைத்த முகம் என ஜாலி திருடனை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பாரதிராஜாவிடம் போலி பாசத்திலும், பின்னர் வரும் நிஜ பாசத்திலும் நடிப்பில் அடுத்த கட்டம் செல்கிறார். அவருக்கு துணையாக வரும் தீனா அடிக்கடி சிரிக்க வைத்து ரிலாக்ஸ் தருகிறார். பாரதிராஜா நடிப்பு பற்றி சொன்னால் அமிர்தம் சுவையாக இருக்கிறது என்று சொல்வது போலாகிவிடும். இவானா கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் இல்லாவிட்டாலும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்.
முதல் படத்திலேயே இயக்குனராகவும், ஒளிபதிவாளராகவும் பாசாகிறார் பி.சி.சங்கர். யானைகள் தொடர்புடைய காட்சிகளில் ஒளிப்பதிவாளராகவும், பாரதிராஜா, ஜி.பிரகாஷ் உறவில் இயக்கனராகவும் தடம் பதிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் தியேட்டரில் கதையோடு ரசிக்க வைக்கிறது.
யானை தொடர்புடைய காட்சிகளில் தயாரிப்பாளரின் பணமும், மற்றவர்களின் உழைப்பும் தெரிகிறது. ஆனால் அந்த காட்சிகளுக்கு நியாயம் செய்யவும் வகையிலான பலம் கதையில் இல்லை. என்றாலும் பார்க்கத் தகுந்தவனாகிறான் இந்த கள்ளன்.