போலி அடையாள அட்டைகள், பாஸ்போர்ட்கள் தயார் செய்ய மோசடி பேர்வழிகள் அதிகம் அறியப்படாத நபர்களின் பெயர்களையும் படங்களையும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் ஐஸ்வர்யா படத்தை போட்டு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் கேன்சர் நோயைக் குணப்படுத்தும் மூலிகை மருந்து இருப்பதாகக் கூறி ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் இந்திய ரூபாயின் மதிப்பில் 11 கோடி அளவிற்கு அவரிடம் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர் புகார் அளித்ததையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவர், கானா நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியாகின.
இந்தக் கும்பல் திருமண வரன் பார்க்கும் தளங்கள், டேட்டிங் தளங்கள் போன்றவற்றில் போலி அடையாளங்களை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.அத்துடன் அவர்களிடமிருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் உருவாக்கப்பட்ட போலி பாஸ்போர்ட் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர 6 செல்போன்கள், 11 சிம் கார்டுகள், லேப்டாப்புகள், பிரிண்டர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.10.76 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும் அவர்களிடமிருந்து போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.